உணவு தானியம் வீணாவதை தடுத்து கண்காணிக்க தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சார்பில் புதிய கருவி கண்டுபிடிப்பு

492

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சார்பில் பயோநெஸ்ட் தொகுப்பு அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் தமிழ்நாடு பயோநெஸ்ட் தொகுப்பின் (கிளஸ்டர்) 10 புதிய தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டன.இந்நிகழ்ச்சியில் பைராக் பயோடெக் துறைக்கான தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் மேக் இன் இந்தியா வசதிப் பிரிவுத் தலைவர் மணீஷ் திவான் தொடக்கி வைத்து பயோநெஸ்ட் தொகுப்பு தொழில் வளர்ப்பகங்களின் கிளின் கிரீன் டெக், நோயறிதல், உணவு தர மதிப்பீடு, உதவி சாதனங்கள், மூலக்கூறு உயிரியல் கருவிகள் உள்ளிட்ட புதிய தயாரிப்புகளை வெளியிட்டார்.இதில், உணவு சேமிப்புக் கிடங்கில் இருப்பு வைக்கப்படும் உணவு தானியங்கள், பழங்கள், காய்கறிகளின் தரத்தைக் கண்காணிப்பதற்கான நவீன சாதனம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தச் சாதனம் மூலம் உணவு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் வீணாவதை முன்கூட்டியே அறிந்து, தடுப்பதற்கு வாய்ப்பாக அமைகிறது. உணவு தானியங்களைக் கிடங்கில் எவ்வளவு காலம் வைத்துக் கொள்ளலாம் என்பதை அறிந்து கொள்ளும் விதமாக இந்த நவீன சாதனம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதேபோல மாற்றுத்திறனாளிகளுக்கான அதிநவீன சக்கர நாற்காலி அறிமுகம் செய்யப்பட்டது, வாய்மொழி உத்தரவு மூலம் இயங்கக்கூடிய இந்தச் சக்கர நாற்காலியில் செல்பேசி மூலம் முன்னே செல்லுதல், பின்னோக்கி நகர்தல், இடது, வலது புறம் திரும்புதல் உள்ளிட்டவை நம்முடைய வாய்மொழியில் பதிவு செய்து, பயன்படுத்தும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும்
மின்னணு சாதனங்களை பேக்கிங் செய்யும்போது பயன்படுத்தப்படும் தெர்மோகோல் பொருள்களுக்கு பதிலாக விவசாயக் கழிவுகளான வைக்கோல், வெல்லப்பாகு, காளான் உள்ளிட்டவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட தக்கை அறிமுகம் செய்யப்பட்டது. தெர்மோகோலை விட மிகவும் பாதுகாப்பான இந்தத் தக்கை மறுசுழற்சி செய்யக்கூடியவை. சுற்றுச்சூழலையும் பாதிக்காத இந்தத் தக்கை மூலம் விவசாயிகளுக்குக் கூடுதல் வருவாயும் கிடைக்கும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ளது.மேலும் செல்பேசி மூலம் காற்று மாசுப்பாட்டை கண்டறிவதற்கான சாதனமும் அறிமுகம் செய்யப்பட்டது.பின்னர், மணீஷ் திவான் பேசுகையில், இந்தத் தயாரிப்பு வெளியீடுகள் வெற்றிகரமானவை. தொழில் வளர்ப்பகங்களில் தமிழ்நாடு தொகுப்பின் ஒருங்கிணைந்த முயற்சிகள் பாராட்டத்தக்கவை என்று தெரிவித்தார்,இவ்விழாவில் சாஸ்த்ரா பல்கலைக்கழக முதன்மையர் சுவாமிநாதன், சாஸ்திராவின் அப்லெஸ்ட் தலைமை நிர்வாக அலுவலர் அனுராதா, தமிழ்நாடு பயோநெஸ்ட் தொகுப்பின் தலைமை நிர்வாக அலுவலர் முத்து சிங்காரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.